
டெல்லி: உள்நாட்டின் வான்வழி பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் கடும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஜூலை மாதம் மட்டும் 4.54 லட்சம் பேர் வான்வழி பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 50.4 லட்சம் பேர் பயணித்திருக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 10 விழுக்காடு குறைவாகும்.
கடந்த 3 மாதங்களாக ஒற்றை இலக்க விழுக்காடாக குறைந்துவந்த விமான பயணிகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் இரட்டை இலக்க விழுக்காட்டைத் ஜூலை மாதம் தொட்டிருக்கிறது.
சரி இதற்குக் காரணம் என்ன? மிக அதிகமாகப் போய்விட்ட விமான கட்டணமும் வீழ்ந்துபோய்விட்ட நாட்டின் பொருளாதாரமும்தான் காரணம்!
இது தொடர்பாக டிராவல் நிறுவனங்கள் என்ன கருத்தை சொல்லுகின்றன? "கடந்த ஜூலை மாதம் மட்டும் 30% முதல் 40% வரை விமான கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் டிராவல் முகவர்களுக்கான கமிஷன் தொகையை 3 விழுக்காட்டில் இருந்து 1 விழுக்காடாக குறைத்துவிட்டது. இதனால் முகவர்கள் டிக்கெட் விற்பனையில் உற்சாகமாக ஈடுபடவில்லை என்கின்றனர்.
ஏர்இந்தியா நிறுவன அதிகாரிகளும் கட்டண உயர்வுதான் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். அதே நேரத்தில் அனேகமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் விமான பயண கட்டணம் குறைய வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.


















