
டெல்லி: குஜராத்தில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலிலும் நரேந்திர மோடிக்கே பெரும் வெற்றி கிடைக்கும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
இப்சாஸ் என்ற நிறுவனம், என்டிடிவிக்காக நாடு முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகளை தினசரி என்டிடிவி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
குஜராத் நிலவரம் குறித்து கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குஜராத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் என்ன நடக்கலாம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பின் சாராம்சம்.
குஜராத்தில் முதல்வர் மோடிக்கே மக்களிடையே பெரும் ஆதரவு நிலவுகிறதாம். சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு அங்கு 120 சீட்டுகள்
கிடைக்குமாம். இது மூன்றில் 2 மடங்கு பலமாகும். இதன் மூலம் குஜராத்தில் தொடர்ந்து 3வது முறையாக மோடியே முதல்வராகும் வாய்ப்புகள் வெகு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.
சிறந்த முதல்வர்
நரேந்திர மோடி சிறந்த முதல்வர் என்று 82 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல குஜராத்தில் நல்லாட்சி நடந்து வருவதாக 84 சதவீதம் பேர் ஆணித்தரமாக கூறியுள்ளனர். இது மோடிக்கும், பாஜகவுக்கும் பெரிய நற்செய்தியாக அமையும் என்று தெரிகிறது.
கடந்த 2007 தேர்தலில் பாஜகவுக்கு 117 தொகுதிகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 120 சீட்டுகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் 62 இடங்களைப் பெற்றது. ஆனால் வரும் தேர்தலில் 59 இடங்களே காங்கிரஸுக்குக் கிடைக்குமாம்.










