
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச செப்டம்பர் 20-ந் தேதி டெல்லி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் இந்திய அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. சீனாவுடனான இலங்கையின் நட்புறவு இந்தியாவுக்கு பேராபத்தாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இம்மாதம் 23-ந் தேதியன்று ராஜபக்சவின் தம்பி பசில் ராஜபக்ச தலைமையிலான குழு இந்தியா வரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையின் சீனா சார்பு போக்கினால் இந்த பயணத்தை கடைசி நேரத்தில் இந்தியா ரத்து செய்தது. அதன் பின்னர் ஜி.எல். பீரிஸ் இந்தியா வருவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜபக்ச மரியாதை நிமித்தமாக சந்திக்கப் போவதாக்க் கூறப்பட்டது. இருப்பினும் டெஹ்ரான் பேச்சில் இந்தியாவை சமாதானப்படுத்த முடியாது என்பதால் மகிந்த ராஜபக்சவே டெல்லிக்கு நேரடியாக வருவது என்று முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை ராஜபக்சே சந்திக்க இருக்கிறார் என்கின்றன இலங்கை வட்டாரங்கள்.


















