சிவகாசி பட்டாசு ஆலை விபத்து குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் விளக்க நோட்டீஸ்
விருதுநகர்: 38 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை விபத்து குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே 38 பேரை பலி கொண்ட இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி மாவட்ட விசாரணையை தொடங்கியுள்ள மாவட்ட வருவாய் அதிகாரி ராஜு கூறியதாவது:
முதலமைச்சர் உத்தரவிட்டபடி பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து நீதி விசாரணை தொடங்க ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார். இதையடுத்து வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை பகுதிகளை நேரில் பார்வையிட்டு அந்த ஆலையின் ஆவணங்களை கைப்பற்றி அவற்றை பரிசீலனை செய்து விதிமீறல்கள் பற்றிய அறிக்கை தயார் செய்யப்படும்.
வெடி விபத்து குறித்து விவரம் அறிந்தவர்களின் சாட்சியங்களும் பெறப்படும். குறிப்பிட்ட தேதியில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தற்போது உள்ள நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கான விசாரணை நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றார் அவர்.