சென்னை: அதிமுக அரசு எத்தனை பொய் வழக்குகளை வேண்டுமானாலும் தொடுத்துக் கொள்ளட்டும். அதைக் கண்டு திமுகவினர் யாரும் துவண்டு போய் விட மாட்டார்கள். மாறாக வீறு கொண்டு எழுவார்கள் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கனிமொழி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா ஆட்சியில் திமுகவினர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சங்கர் வீட்டில் நள்ளிரவில் போலீஸார் சுற்று சுவரை எகிறி குதித்து வீட்டில் இருந்த பெண்களிடம் சோதனை நடத்தினர்.
வீரபாண்டி ஆறுமுகத்தைக் கைது செய்த போலீஸார் அவரது வயதினையும் பொருட்படுத்தாமல் திருச்சி, சேலம், வேலூர் என ஒவ்வொரு சிறையாக கொண்டு சென்று அலைக்கழித்தனர்.
இதுபோன்று எத்தனை தாக்குதலைத் தொடுத்தாலும் திமுகவினர் துவண்டுவிட மாட்டார்கள். மாறாக எதிர்த்துப் போராடும் ஆற்றல் திமுகவினருக்கு அதிகரித்துள்ளது.
திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேசன் சார்பில் கட்டித் தரப்பட்ட சிறப்பு மருத்துமனையை சரிவர பராமரிக்காமல் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். ஆனால், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றவும், அண்ணா நூலகக் கட்டடத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாகவும் மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடுகிறார் என்றார்.










