பிரணாபை சந்தித்து நிலக்கரி ஊழல் விவகாரத்தில் தலையிட பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பொதுகணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து நிலக்கரி ஊழல் பிரச்சனையில் தலையிடுமாறு கோரி்க்கை விடுத்தனர்.
நிலககரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து தொடங்கிய நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக தொடர் அமளியில் ஈடுபட்டது. இதனால் மழைகால கூட்டத் தொடர் முழுவதும் எந்த அலுவல்களும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பொதுகணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது அவர்கள் பிரணாபை நிலக்கரி ஊழல் பிரச்சனையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நிலக்கரி ஊழல் குறித்து மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறித்து பிரமதரும், காங்கிரஸும் கேள்வி எழுப்பியுள்ளது குறித்தும் அவர்கள் பிரணாபிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நிலக்கரி ஊழல் விஷயத்தில் தலையிடுவது அரசியலமைப்பின் பாதுகாவலரான ஜனாதிபதியின் கடமை. நாங்கள் கூறியதை பிரணாப் பொறுமையாகக் கேட்டுவிட்டு இந்த விவகாரம் குறித்து பார்ப்பதாக உறுதியளித்தார் என்றார்.