டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் ஆசியா ஓசியானா குரூப்-1 முதல் சுற்று 'பிளே-ஆப்' போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகள் மழை காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக துவங்கின.
சிஎல்டிஏ டென்னிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவிற்கான முதல் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் டேனியல் கிங் டர்னரை எதிர்கொண்டார். துவக்கத்தில் மந்தமாக ஆடிய யூகி, முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்தார். அடுத்த செட்டில் அதிரடியாக ஆடிய நியூசிலாந்து வீரர் 6-0 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார்.
இதன்பிறகு சுதாரித்து கொண்ட யூகி 3வது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என்ற கணக்கில் யூகி வென்றார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது செட்டில் அதிக பரபரப்பு ஏற்பட்டது. அதிரடியாக ஆடிய யூகி 6-2 என்ற கணக்கில் 5வது செட்டை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மொத்தம் 3.15 மணிநேரம் நடைபெற்ற இந்திய வீரர் யூகி பாம்ப்ரி 3-6, 0-6, 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
விஷ்ணு வர்தன் வெற்றி:
ஒற்றையர் பிரிவின் மற்றொரு போட்டியில் இந்தியாவின் விஷ்ணு வர்தன், நியூசிலாந்து வீரரான ஜோஸ் ஸ்டாதமை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் அபாரமாக ஆடிய விஷ்ணு வர்தன் 6-2 என்று செட்டை கைப்பற்றினார். ஆனால் 2வது சுற்றில் கடும் நெருக்கடி கொடுத்து ஆடிய விஷ்ணு வர்தன், 6-7 என்று கணக்கில் செட்டை இழந்தார். 3வது சுற்றில் சிறப்பாக ஆடிய விஷ்ணு 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அதன்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் 10 மணிக்கு நடைபெற வேண்டிய போட்டி, மழை காரணமாக தாமதமாக துவங்கியது. நேற்றைய மீதமுள்ள ஆட்டத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி 4வது செட்டை 6-2 என்று எளிதாக விஷ்ணு வர்தன் கைப்பற்றினார்.
இதன்மூலம் மொத்தம் 2.57 மணிநேரம் நடைபெற்ற போட்டியி்ல விஷ்ணு வர்தன் 6-2, 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மேலும் அணிகளின் புள்ளிப்பட்டியலில் இந்தியா 0-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.