இலங்கை பாக்.தூதரகத்துக்கு ராணுவ ரகசியத்தை விற்க முயற்சித்த நபர் திருச்சியில் கைது
திருச்சி: இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமீம் என்ற நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கைக்கு செல்ல முயன்ற தமீம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தமீமிடம் இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடி இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் தமீமை போலீசார் கண்காணித்து சுற்றி வளைத்தனர். அப்போது இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு செல்ல தமீம் முயற்சித்தது தெரியவந்தது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் சிடியை கொடுக்க சென்றதாகவும் போலீசில் தமீம் கூறியுள்ளார்.
இதையடுத்து தமீம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 1- ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே தமீமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.