''நாட்டு மக்களுக்கோர் அறிவிப்பு''....ராத்திரி 8 மணிக்கு விளக்கப் போகிறார் பிரதமர்!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது என்றமத்திய அரசின் முடிவு. இதற்கு நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடையே கடும் கொந்தளிப்பான எதிர்ப்பு நிலவுகிறது. இதை வலியுறுத்தித்தான் நேற்று நடந்த பாரத் பந்த்தின்போது வர்த்தகர்கள் ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைக் காட்டினார்.
பாஜக, இடதுசாரிகள் மட்டுமல்லாமல் மமதா பானர்ஜி உள்ளிட்டோரும் கூட இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மக்களிடையே நேரடியாக விளக்கம் அளிக்க பிரதமர் தீர்மானித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அவர் இந்தத் திட்டம் குறித்து விளக்கம் தரவுள்ளார்.
சில்லறை வர்த்தகம் தொடர்பாக மட்டுமல்லாமல் தனது அரசு எடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொலைக்காட்சிப் பேச்சுக்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.