பைலட்டுகள்-ஊழியர்கள் போராட்டம்..: கிங்பிஷர் விமான சேவை முற்றிலும் முடங்கியது..!
இந்தப் போராட்டம் காரணமாக இன்று கிங்பிஷர் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
பைலட்டுகளுக்கு 7 மாத ஊதிய பாக்கி, என்ஜினியர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் பல மாத பாக்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் பாக்கி என பல பாக்கிகளை வைத்துள்ளார் விஜய் மல்லையா.
இதோ இந்த அன்னிய முதலீட்டாளர் வரப் போறார், இதோ பணம் வரப் போகிறது என்று சொல்லிச் சொல்லியே வங்கிகளை திசை திருப்புவதோடு தனது ஊழியர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
இந் நிலையில் பைலட்டுகள், என்ஜினியர்கள், ஊழியர்கள் தனித்தனித்தே அவ்வப்போது சில மணி நேரம் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இந் நிலையில் இன்று அவர்கள் அனைவருமே ஒன்றாக சேர்ந்து போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் வெறும் 7 விமானங்களுடன் இயங்கி வரும் கிங்பிஷர் இன்று தனது 31 சேவைகளையும் ரத்து செய்துவிட்டது.
இந் நிலையில் இன்று பைலட்டுகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கப் போகிறதாம்.
மூடுவோம் என அமைச்சர் எச்சரிக்கை:
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங், என்ஜினியர்கள் வேலை நிறுத்தத்தால் கிங்பிஷர் விமானங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் பிரச்சனை வரும் என்று தெரிந்தால் அந்த நிறுவனத்தை மூடுவோம் என்றார்.
இந் நிலையில் இது குறித்து விவாதிக்க கிங்பிஷரின் தலைமை செயல் அதிகாரியை நாளை டெல்லிக்கு அழைத்துள்ளது விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம்.