திமுக, காங்கிரஸை அரசியல் குப்பை தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்: வைகோ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சோப லட்சம் ஈழத் தமிழர்களை, ஈவு இரக்க மில்லாமல் படுகொலை செய்த சிங்கள கொலைவெறி இனவாத அரசின் அமைச்சரும், அதிபரின் சகோதரனுமான பசில் ராஜபக்சே, நேற்று கொழும்பில் மிகவும் திமிராகவும், அகம்பாவத்தோடும் என்ன எதிர்ப்பு இருந்தாலும், சிங்கள ராணுவ வீரர்கள் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள், இதுவரை இந்தியாவில் தான் பயிற்சி பெற்றும் வந்தார்கள் என்று அறிவித்துள்ளான்.
இந்திய அரசாங்கத்தை நடத்துவது சோனியா காந்தியின் கைப்பாவையான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களா? அல்லது கொலைப் பாதகன் ராஜபக்சேயின் குடும்பமா? என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துவிட்டது.
ஏனெனில், விடுதலைப் புலிகளுடன் யுத்தம் என்ற பெயரில் சிங்கள அரசும், இராணுவமும் நடத்திய தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியதும், இந்தியத் தளபதிகளை அனுப்பி திட்டம் வகுத்துக் கொடுத்ததும், இந்தியாவின் முப்படைகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடம் இன்றி வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இந்தக் கூட்டணி அரசில் பங்கேற்ற திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ் இனக்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளே. இதற்குப் பின்னரும் காங்கிரசோடு கைகோர்ப்பதும், தமிழ் இனக்கொலை நடைபெற உதவிய அன்றைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் ஆகும்.
தமிழ் ஈழ விடியலுக்கு உண்மையில் பாடுபடுவோர் யார்? அதற்கு துரோகம் இழைத்துக் கொண்டே தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் கபட வேடதாரிகள் யார்? என்பதை முத்துக்குமார் முதல் விஜயராஜ் வரை தங்கள் தேகத்தில் பற்ற வைத்தத் தியாக நெருப்பின் வெளிச்சம் அடையாளம் காட்டிவிட்டது.
சிங்களக் கொலைகார கூட்டத்துக்கு இந்தியாவில் யாரெல்லாம் ஆதரவு தருகிறார்களோ, அவர்களை அரசியல் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டியது தமிழக மக்களின் கடமை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனித உரிமையில் அக்கறைகொண்ட அனைவரின் கடமையும் ஆகும் என்று கூறியுள்ளார் வைகோ.