தமிழகத்தில் போலீசாருக்கு எதிரான புகார்கள் அதிகரிப்பு: மனித உரிமைகள் ஆணைய தலைவர்
சென்னை: தமிழ்நாட்டில் போலீசாருக்கு எதிராக 90 சதவிகித புகார்கள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு வருவதாக மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் கே.பாஸ்கரன் கூறியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றிய பயிற்சி முகாம் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வியாழக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. மனித உரிமைகள் ஆணையத்தின் மாநில தலைவர் (பொறுப்பு) கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந் பயிற்சி முகாமில் கூடுதல் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் பங்கேற்றனர்.
பயிற்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே. பாஸ்கரன்,
மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மனித உரிமைகள் மீறப்பட்டதாக அதனால் பாதிக்கப்பட்டதாக கூறி 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றார். அந்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து இருதரப்பினரையும் அழைத்து விசாரிப்போம். விசாரணை நடத்தியதில் உண்மைஇருக்குமென்றால் அது குறித்து குற்றம் இழைத்த அதிகாரி அல்லது ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம். அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறி அரசுக்கு பரிந்துரைசெய்வோம்.
இந்த வருடம் இதுவரை 8 ஆயிரத்து 220 புகார்கள் வந்துள்ளன. புகார்களில் 90 சதவீதம் போலீசாருக்கு எதிராகத்தான் உள்ளன. அதிலும் போலீசார் தாக்கினார்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் புகார்தெரிவித்துள்ளனர் என்றும் பாஸ்கரன் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின்போது போலீசார் தாக்கி இறந்ததாக புகார் வரும். இப்படிப்பட்ட புகாரில் உண்மையிருப்பதாக தெரிந்தால் போலீஸ் உயர் அதிகாரிக்கு தெரிவித்துவிட்டு அரசுக்கு தகவல் தெரிவிப்போம்.
புகார் மீது எந்த உத்தரவையும் வழங்க மனித உரிமை ஆணையத்திற்கு உரிமை இல்லை.மேலும் அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் என்று பல மனித உரிமை அமைப்புகள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளன. அப்படிப்பட்ட அமைப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என்றும் பாஸ்கரன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மனித உரிமை ஆணையத்தின் கவுரவ உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஜெயந்தி, தற்போது தமிழ்நாட்டில் பாகுபாடு இன்றி போலீசார் நடவடிக்கை எடுக்கும் நல்ல சூழ்நிலைஉள்ளது. இதை பயன்படுத்தி எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து சரியான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.,