மனித தலைகளை வேட்டையாடி வீரத்தை வெளிப்படுத்தும் நாகா பழங்குடிகள்
ஹோகிமா: மனிதன் தோன்றிய ஆதி காலம் முதல் கடைபிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் இன்றளவும் எச்ச சொச்சங்களாக அனைத்து இனக்குழுக்களிடத்திலும் இருக்கின்றன. இப்படி கடைபிடிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்றுதான் மனித தலைகளைவெட்டி வேட்டையாடுதல். இனக் குழுக்களாக பிரிந்து கிடத்த மனிதர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை மற்றொரு இனக்குழு ஆக்கிரமிக்கும் போதும் தங்களது இனத்து பெண்களை கால்நடைகளை வேற்று இனக்குழு வேட்டையாடும்போதுதான் தங்களது வீரத்தை வெளிப்படுத்த "தலைவெட்டி" வேட்டையாடுதலை பின்பற்றி வந்திருக்கின்றனர். ஆதி காலத்தில் தொடங்கிய இந்த மனித தலைவெட்டி வேட்டை இந்தியாவில் விடுதலைக்கு சிறிதுகாலம் முன்புவரை நீடித்திருந்தது என்பது ஆச்சரியமும் அதிர்ச்சிக்கும் உரிய செய்தி அல்லவா?
மண்டை ஓடு புதையல்
இந்தப் படத்தில் இருக்கும் மண்டையோடுகள் ஏதோ யுத்த காலத்தில் புதைந்து கிடந்த மண்டை ஓடுகள் கிடையாது. இவை நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. குவியல் குவியலாக எப்படி மண்டை ஓடுகள் பூமிக்கு அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறதா? மனிதர்களின் தலைகளை வெட்டி எடுப்பதே வாழ்வின் வீரமாக கருதி வாழ்ந்த 'கோன்யாக்' எனும் நாகா இனக்குழுவினரின் பூர்வீக பிரதேசம் எது. என்னது "மனித தலைவெட்டி மனிதர்களா" என்கிறீர்களா? அடுத்த படத்தைப் பாருங்கள்
ஒரு தலைவெட்டியின் சரித்திரம்
செத்து செத்து விளையாடலாம் என்பது சும்மா கிச்சுமூச்சு வசனம் அல்ல...நாகலாந்தில் மனித தலைவெட்டி மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சியாக இருக்கும் கல்லறையின் க்லவெட்டு இது. 1923ஆம் ஆண்டு பிறந்த லெப். அகாங் ரோங்காங் என்ற கோபா கடந்த 2001-ம் ஆண்டுதான் இறந்திருக்கிறார். அவருக்கு மொத்தம் 18 மனைவிகள். 19 மகன்கள். 7 மகள்கள். 59 பேரக் குழந்தைகள். இவர் வாழ்வில் நிகழ்த்திய சாதனை என்ன தெரியுமா? இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை மற்றொரு குழுவினர் ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் அவர்களது தலைகளை வெட்டி எடுப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். தமது வாழ்நாளில் 36 மனித தலைகளை வெட்டி எடுத்து "வீரமிக்க" மனிதராக வாழ்ந்திருக்கிறார். இவரது வழித்தோன்றலோ 130 மனிதத் தலைகளை வேட்டையாடிருக்கின்றனராம்!
பொக்கிஷமாக மண்டை ஓடுகள்
ஒரு வீட்டின் முன்பாக கல்படுகை அமைத்து அதில் குவித்து மண்டை ஓடுகளை குவித்து வைத்திருக்கிற காட்சி... இதுவும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்து "சிங்கின்யூ" என்ற கிராமத்து காட்சிதான்... முன்னோர்கள் வெட்டி எடுத்து வந்த தலைகளை அவ்வளவு பத்திரமாக இன்றும் பாதுகாத்து வருகின்றனர் நாகாலாந்தின் கோன்யாக் குழுவினர்..
தலை இல்லைன்னா. ஒரே இரு காது...
இன்றளவும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் வசித்து வரும் "முன்னாள்" தலைவெட்டி மனிதர்கள். இவர்கள் கூறும் மற்றொரு சுவாரசிய தகவல் என்ன தெரியுமா? எதிர்க் குழுவைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுக்க முடியாது போனால் ஆகக் குறைந்த பட்சம் அவர்களில் ஒருவரது ஒரு "காதையாவது" அறுத்து வந்து தங்களது கிராமத்து தலைவரிடம் ஒப்படைத்து "வீரத்தை" வெளிப்படுத்திக் கொள்வார்களாம்
வரலாற்று பெருமிதமாக "தலைவெட்டிகள்" -
நாகாலாந்து தலைநகர் ஹோகிமாவில் அமைக்கபப்ட்டிருக்கும் நாகா இனக்குழுவினரின் வாழ்வியல் அருங்காட்சியகத்திலும் மனிதத் தலைகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பதை "பறைசாற்றிக் கொள்ளும்" புகைப்படம்தான் இது. இந்த மனிததலைவெட்டும் வேட்டை ஆங்கியேலர் ஆட்சிக்காலத்தில்தான் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அதாவது சுமார் 60 ஆண்டுகாலத்துக்கு முன்புவரை நாகாலாந்தில் மனித தலைவெட்டிகள் "உற்சாகமாக" வீரத்தை பறைசாற்றி வந்திருக்கின்றனர். இன்னொரு தகவல் என்ன தெரியுமா? அமெரிக்காவின் அமேசான், ஆப்பிரிக்காவின் அடர்வனத்து பழங்குடிகள் எல்லாம் இப்படி மனித தலைவேட்டையை முன்னரே நிறுத்திவிட்டனர். உலகிலேயே மனித தலைவெட்டுதலை கடைசியாக நிறுத்த "வரலாற்று" பெருமைக்குரியவர் நாகாலாந்தின் கோன்யாக் குழுவினரே!