கூடுதல் மின்சாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு
தமிழகம் வரலாறு காணாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பெற முயற்சித்தது. ஆனால் மின்சாரத்தை கொண்டும் வரும் மின்வழித் தட சிக்கலால் இது சாத்தியம் இல்லாமல் போனது. மேலும் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கோரி பிரதமருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் டெல்லி மாநில அரசானது தம்மிடம் உள்ள உபரி மின்சாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்திருந்தது. இந்த மின்சாரத்தையாவது தமிழகத்துக்கு தரவேண்டும் என்று பிரதமருக்கு மீண்டும் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து அண்மையில் கூடிய தமிழக அமைச்சரவை இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. இம்முடிவின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தமிழக அரசு தமது மனுவில், டெல்லி மாநில அரசு ஒப்படைக்க இருக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றும் மத்திய மின் தொகுப்பிலிருந்து தென் மத்திய மின் தொகுப்புக்கு செல்லக் கூடிய மின்வழித் தடங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.