பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி-இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு
சேலம்: அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சார்வாய் கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக அரசு மற்ற மாநிலங்களை போல மத்திய அரசுடன் சுமூகமான உறவை வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையால், தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சனை குறித்து ஆலோசிக்கும் போது, கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து கட்சிகளை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும். மக்களுக்கு நன்மை செய்கின்ற, மாணவ சக்திக்கு நல்வழி காட்டுகின்ற இந்திய ஜனநாயக கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.