ரவுடிகளுடன் சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை: ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரை
மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தியில் சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் ரவுடிக்கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த பகுதியில் ரவுடிகள் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
எல்லாமே புதுசுதான்
இந்த நிலையில் அண்ணா நகர் சரக உதவி ஆணையாளராக இருந்த வெள்ளைத்துரை மானாமதுரை டி.எஸ்.பியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக ஆய்வு மேற்கொண்ட அவர் மானாமதுரை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பழைய காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்துவிட்டு புதிய ஆட்களை நியமித்தார். டிரைவர் உள்ளிட்ட அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றிய மதுரையில் பயன்படுத்தி வந்த வாகனத்தைதான் பயன்படுத்தி வருகிறார்.
சமாதானமே கிடையாது
இதன் பின்னர் நம்மிடம் பேசிய அவர், ரவுடிகளுடன் எவ்வித சமாதானமும் கிடையாது என்றார். அமைதியான முறையில் கையாளுவதை விட அடிதடி முறைதான் ரவுடிகளை அடக்க உதவும் என்றும் கூறினார். டி.எஸ்.பி வெள்ளைத்துரையின் இந்த பேச்சு ரவுடிகளுக்கு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றிருந்த வெள்ளைத்துரைதான் வீரப்பனை சுட்டுக் கொன்றவர். இதன் மூலம் இவருக்கு இரட்டை பதவி உயர்வை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. ஆனார்.
வீரப்பன் வேட்டையில் மட்டுமல்லாமல், சென்னையைக் கலக்கி வந்த அயோத்தியா குப்பம் வீரமணியையும் நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி என்கவுண்டர் செய்தவர் வெள்ளைத்துரை.
மதுரை டூ மானாமதுரை
கடந்த மதுரையில் அண்ணா நகர் சரக உதவி ஆணையாளராக வெள்ளைத்துரை நியமிட்ட வெள்ளத்துரை இப்போது மானாமதுரை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இங்கு ரவுடிகள் வேட்டை தொடங்கும் என்றும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோர் வேட்டையாடப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.