குளிர்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றிய விவாதம்: ஜெயந்தி நடராஜன்
சென்னை: வரும் 22ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகள் கூட்டத்தை நடத்த விடாமல் செய்தனர். இதனால் முக்கிய மசோதாக்கள் எதுவும் அப்போது நிறைவேற்றப்பட முடியவில்லை. வரும் 22ம் தேதி துவங்கும் குளிர்கால கூட்டத் தொடரை அமைதியாக நடத்த எதிர்கட்சியினர் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.
குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் புலிகள் சரணாலயங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம்.
நாகை மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு அடியில் சென்ற கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், பழுதடைந்த குழாய்களை சீரமைக்கவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் வலியுறுத்தினேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹசாரே குழுவினர் மத்திய அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. கறுப்புப் பணம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது எனது துறையின் கீழ் வராது என்றார்.