பிரான்சில் புலிகளின் தளபதி பரிதி சுட்டுப் படுகொலை: கருணாநிதி இரங்கல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இவர் பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஆவார். 1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக களப்பணி ஆற்றியவர் பரிதி. 1990-ம் ஆண்டில் காயமடைந்த நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பினார்.
ஈழத்திலும், பிரான்ஸ் நாட்டிலும் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் பரிதி. அவருடைய இந்த அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.