For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்-எஸ்பி அதிரடி

By Chakra
Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரியில் ஜாதிக் கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் குடிபோதையில் இருந்ததையடுத்து அவரை சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமார் மூலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி. அஸ்ரா கர்க்.

தர்மபுரி நத்தம் காலனியில் இரு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதையடுத்து ஒரு தலித் கிராமமே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் எஸ்.பி. அஸ்ரா கர்க் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன் இரவில் கம்புநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எஸ்.பி. அஸ்ரா கர்க் மைக்கில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் மைக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அஸ்ரா கர்க் அந்தப் பகுதிக்கு வந்தார்.

அப்போது எதிரே இன்ஸ்பெக்டரின் ஜீப் வந்தது. அதை எஸ்.பி நிறுத்தினார். அப்போது டிரைவர் இல்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனே தனியாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார்.

அவரை எஸ்.பி. நெருங்கியபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்பி. அஸ்ரா கர்க் மைக்கிலேயே தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து போலீசாரிடமும் பேசினார். ''தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், பாதுகாப்புக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில் இருக்கிறார். எனவே அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப் போகிறேன். யார் தவறு செய்தாலும் இதே நிலை தான்'' என்று ஓபன் மைக்கிலேயே எச்சரித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பெரும் குடிபோதையில் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்து சான்றிதழும் தந்தனர்.

இதை அஸ்ரா கர்க், சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமாருக்கு அனுப்ப, உடனடியாக அவர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

மதுரையில் ஓவர் ஆட்டம் போட்டு வந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆட்களை ஒடுக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அஸ்ரா கர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dharmapuri district SP Asra Garh suspended inspector for making night rounds in inebriated condition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X