''பூப்பெய்திய பெண்ணுக்கு படிப்பெதற்கு''?: 9ம் வகுப்பு மாணவியின் படிப்பை நிறுத்த வைத்த ஜமாஅத்
புதுக்கோட்டை: மணல்மேல்குடி அருகே பூப்பெய்த பிறகு பெண்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்று ஜமாஅத் வற்புறுத்தியதன்பேரில் 9வது வகுப்பு மாணவியின் படிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி.ஆர். பட்டனத்தைச் சேர்ந்த நல்ல முகமது- ஹாஜிரம்மாள் தம்பதியின் மகள் ஜனுபா பேகம் (16).
ஹாஜிரம்மாள் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் சமீபத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ஜனுபா மணல்மேல்குடியில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவர் பள்ளிப் படிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தார் வற்புறுத்தினர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர்.
அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் டி.சியை வாங்கிய பிறகு ஊருக்குள் வந்தால் போதும் என்று ஜமாஅத் உறுப்பினர்கள் எனது கணவரிடம் தெரிவித்துள்ளனர். அதில் இருந்து எனது கணவர் ஊருக்குள் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நாங்கள் பணக் கஷ்டத்தால் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். அதன் பிறகு நான் வீட்டு வேலைக்கு சென்றேன் என்றார்.
இதற்கிடையே பூப்பெய்த பெண்ணை விதிகளை மீறி பள்ளிக்கு அனுப்பியதற்காக ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15,000 அபராதம் விதித்தார். ஹாஜிரம்மாள் வீட்டுக்கு அருகில் வசி்ப்பவர் ஒருவர் அபராதத்தைக் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் தனக்கு உதவிய நபருக்கு அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களிலும் ஜமாஅத்தால் இதே பிரச்சனை உள்ளது என்று ஹாஜிரம்மாள் தெரிவித்தார்.
ஹாஜிரம்மாளின் மனுவை கலெக்டர் அலுவலகம் தலைமை கல்வி அதிகாரிக்கு அனுப்ப அவர் அதை எஸ்.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு அந்த மனு வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் அந்த மனு கலெக்டர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று தலைமை கல்வி அதிகாரி என். அருள் முருகன் தெரிவித்துள்ளார்.
பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தைச் சேர்ந்த அன்சர் என்பவர் தனது மகள் ஷர்மிளா பானுவை எட்டாம் வகுப்போடு நிறுத்தி விட்டார். அவரிடம் ஹாஜிரம்மாள் விவகாரம் குறித்து கேட்டதற்கு இது சொந்த விவகாரம் என்று கூறிவிட்டார்.