பெங்களூரில் ஆட்டோவில் தனியாக செல்பவரா? கண்டிப்பாக இதைப் படிங்க
ஆட்டோவில் தனியாக செல்பவர்களிடம் ஓட்டுநரே கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அன்று தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு அதிகாலை 4 மணிக்கு வந்த ஒருவர் தான் தங்கும் இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த நபர் ஆட்டோக்காரருக்கு கொடுக்க தனது பர்சில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். அவரது பர்சில் கத்தையாக நோட்டுகள் இருப்பதைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் உடனே தனது நண்பரை போன் செய்து வரவழைத்தார். இருவருமாகச் சேர்ந்த அந்த பயணியைத் தாக்கி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
அதனால் ஆட்டோவில் தனியாக செல்பவர்கள் தங்கள் பணம் மற்றும் உடைமைகளைக் காக்கச் செய்ய வேண்டியவை வருமாறு,
ஆட்டோவில் அமர்ந்துகொண்டு பர்ஸை வெளியே எடுத்து பணத்தை எண்ணக் கூடாது.
ஆட்டோவில் ஏறும் முன்பே கட்டணம் செலுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும்.
அதிகாலை, நள்ளிரவு போன்ற நேரம் கெட்ட நேரங்களில் முடிந்தவரை ஆட்டோவில் தனியாக செல்ல வேண்டாம்.
ஆட்டோவில் இருந்து இறங்கும்போது உங்கள் பொருட்களை நியாபமாக எடுத்துக் கொண்டு செல்லவும்.
ஆட்டோ மீட்டரில் தவறு இருந்தால் அதை உடனே ஓட்டுநரிடம் கூறுங்கள். என் மீட்டர் நல்ல மீட்டர் தான் அது காட்டும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தால் உடனே ஆட்டோவை நிறுத்தி இறங்கிவிடவும்.
ஊருக்கு வெளியே மற்றும் ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் முடிந்த வரை தனியாக ஆட்டோவில் செல்ல வேண்டாம். ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பயணிகளைத் தாக்கி ஆட்டோ ஓட்டுநர்கள் பணம், நகையைப் பறித்த சம்பவங்கள் ஏராளம்.
ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு பண விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.
அதே சமயம் விலை உயர்ந்த பொருட்களை மறந்து சென்றாலும் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.