தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும்: வைகோ கோரிக்கை
மாமல்லபுரம்: கோவில்களின் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டுமெனில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
தொல்லியல் துறையின் மக்கள் விரோத 2010 ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் மாமல்லபுரத்தில் புதன்கிழமையன்று மதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய வைகோ கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை கொண்டு வந்துள்ள 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத்தால் தமிழ்நாட்டில் சுமார் 450 புராதனச் சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கு மாநில சுயாட்சிக்குக் கேடு. மத்திய தொல்லியல்துறை வழிபாட்டு இடங்களுக்கும் கலைச்சிற்பங்களுக்கும், கல்லறைகளுக்கும் ஒரே அளவுகோல் கொண்டு 2010 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தினை அறியாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி சந்தடி சாக்கில் அமளிகளுக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மத்திய தொல்லியல் துறை தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வந்த மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்த 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மத்திய தொல்லியல்துறை செவிசாய்க்கவில்லை. மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கிற்கும் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காததும் கவலை தருகிறது.
இதேபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தை தொல்லியல்துறை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதேபோல் மாமல்லபுரம் தல சயனப்பெருமாள் ஆலயத்தை ஒருபோதும் தொல்லியல்துறை கையகப்படுத்த மாநில அரசு ஒப்புக்கொள்ளக்கூடாது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.
ஆர்பாட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்களும், மாமல்லபுரம் பொதுமக்களும் பங்கேற்றனர்.