கணவனுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு மனரீதியான கொடுமைதான்: ஐகோர்ட் தீர்ப்பு
மதுரை: கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதும் ஒருவகையான மன ரீதியான கொடுமைதான் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். இதனை காரணமாக வைத்து கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.அய்யனாருக்கு அவருடைய அக்காள் மகள் முனியம்மா உடன் 10.6.1988 ஆம் திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் இருவரையும் உறவினர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். அதன்பின்னர் 7 மாதங்களே ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை 24.11.1988 அன்று பிறந்துள்ளது. பிரசவத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்ற முனியம்மாள் பின்னர் கணவன் வீட்டுக்கு வரவில்லை.
இதற்கிடையில் கணவன் அய்யனாருக்கு, முனியம்மாள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் கணவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இதையடுத்து, தென்காசி சார்பு கோர்ட்டிலும், பின்னர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டிலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, தன் கணவர் விவாகரத்து வழங்க கூடாது என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ அவருக்கு அய்யனாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் முனியம்மாள் மனு தாக்கல் செய்த மனு 17.7.2000 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் முனியம்மாள் தாக்கல் செய்த அப்பீல் மனு ஏற்றுக் கொண்ட நீதிபதி மனைவியுடன் சேர்ந்து வாழ அய்யனாருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் அப்பீல் செய்தார்.
இந்த 2 இரண்டு அப்பீல் மனுக்களும், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பரபரப்பான தீர்ப்பினை அளித்தார். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அய்யனார், முனியம்மாள் தம்பதியினருக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அய்யனாரும், முனியம்மாளும் திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்கள். ஆனால், இருவரும் ஓர் ஆண்டு கூட ஒற்றுமையாக குடும்பம் நடத்தவில்லை. இரண்டு பேரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அய்யனார் மீது முனியம்மாள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொய்யான குற்றச்சாட்டை கூறி கணவனின் ஒழுக்கத்தை முனியம்மாள் படுகொலை செய்து, தன்னுடைய திருமண வாழ்வுக்கு சாவு மணி அடித்துள்ளார்.
ஒரு பொய்யான குற்றச்சாட்டை கணவனுக்கு எதிராக மனைவி சுமத்தி வழக்கு தொடர்ந்தால், அது அந்த கணவனை மன ரீதியான கொடுமை செய்வதாக அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.
முனியம்மாள் விதைத்ததை அறுவடை செய்துள்ளார். இவர் கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி செய்த தவறு, பிற பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். எனவே இவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி விமலா தன்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.