வடிவேலு மதிமுகவில் சேரப் போகிறாரா?
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை வடிவேலு ஒரு நடிகராக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் விஜயகாந்த்தின் தேமுதிகவுடன், அதிமுக கூட்டணி என்று செய்தி வந்ததுமே அவர் திமுக பக்கம் சாய்ந்தார். கருணாநிதியைச் சந்தித்தார். விஜயகாந்த்துக்கு எதிராக தீவிரப் பிரசாரம் செய்வேன் என்று அறிவித்தார்.
சொன்னது போலவே பிரசாரத்திலும் குதித்தார். கப்பல் கேப்டனா, ராணுவ கேப்டனா என்று ஆரம்பித்து நான் பாஸ்கர் இல்லைண்ணே, பாண்டிண்ணே என்ற நக்கல்வரை விஜயகாந்த்தை வறுத்தெடுத்தார். அய்யோ பரிதாபம்... தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவியது, அதிமுக பெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்த்தும் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.
தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறிப் போனது. அவருக்குப் படம் தர இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் படம் இல்லாமல் போனது. வடிவேலுவும் அலட்டிக் கொள்ளவில்லை. மதுரையோடு போய் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்.
இடையில் அவர் அதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் வந்தன. அதை வடிவேலு மறுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் மதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
அதாவது திருச்சியில் நாளை நடைபெறும் நாடாளுமன்றத்தில் வைகோ என்ற நூல் வெளியீட்டு விழாவில் வடிவேலுவும் பங்கேற்பதாக நிகழ்ச்சி அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து வடிவேலு மதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
உண்மை என்னவென்று வடிவேலுவே சொன்னால்தான் உண்டு!