சென்னையிலிருந்து மதுரை- திருவனந்தபுரத்துக்கு இன்று முதல் துரந்தோ ரயில் சேவை தொடக்கம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் புதிதாக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை- மதுரை
துரந்தோ ரயில்கள் ஒரு மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. மதுரைக்கு திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமை இரவு 10.30 மனிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக காலை 7 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவு 10.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை சென்ட்ரலை வந்தடையும். மொத்த பயண நேரம் 8 மணி 30 நிமிடங்கள்.
சென்னை- திருவனந்தபுரம்
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 4.30மணிக்கு திருவனந்தபுரத்துக்கான துரந்தோ ரயில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும். திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை, சனிக்கிழமை இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15க்கு சென்னை வந்தடையும். மொத்த பயண நேரம் 16 மணி 45 நிமிடங்கள்.
இந்த ரயில்களின் 12 பெட்டிகளுமே ஏசி வசதி செய்யப்பட்டவை.
இந்த இரண்டு துரந்தோ ரயில்களின் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு கொடி அசைத்து துரந்தோ ரயில்களை தொடங்கி வைக்கிறார்.