ஜெ. பிரதமரானால் இந்தியா வல்லரசாகுமாம்!... தமிழக அமைச்சர்கள் பேச்சு!
சேலம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை மாநிலம் தோறும் அதிமுகவினர் நடத்திவருகின்றனர். சேலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேசியதாவது:
காவிரி பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கவும், நாடு வல்லரசாகவும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார் அவர். இதேபோல் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.
தமிழகத்தில் எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை முதல்வர் வழங்கி வருகிறார். ஆனால், 90 சதவீத அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் இந்த பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவதாக கூறுவதில்லை.எனவே, இதுபோன்ற விழாக்களில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார் அமைச்சர் கே.பி.முனுசாமி.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினையை தீர்ப்பது பற்றி எந்த அமைச்சரும் விவாதிப்பதாக தெரியவில்லை. அதை விடுத்து இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பது பற்றியும், ஜெயலலிதாவை பிரதமராக்குவது பற்றியும் பேசி வருகின்றனர் என்று விமர்சனம் எழுந்துள்ளது.