ஐபிஎல் சீசன் 1 தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது. 'டெக்கான் சார்ஜர்ஸ்' என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது. இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், அதற்கு வழங்கப்பட்ட ஹைதராபாத் அணி உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த அக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டது. ரூ.85 கோடிக்கு சன் குழுமம் ஏலம் கேட்டது. ஏலத்தில் பங்கேற்ற இதர நிறுவனங்கள் கேட்டதைவிட அது அதிகமாக இருந்ததால், சன் குழுமம் ஹைதராபாத் அணிக்கான உரிமத்தை வென்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது சன் ரைசர்ஸ் என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.பி.எல் சீசன் 6ல் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கும். இதுநாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய சன் டிவி இனி சன் ரைசர்ஸ் அணிக்கு ஆதரவாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.