மாயன் காலண்டர் மர்மம்.. நாளைக்கு கார்த்தாலே உலகம் அழிந்துவிடுமா?
நியூயார்க்: மாயன் காலண்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் 21க்கு பிறகு தேதிகள் குறிக்கப்படாததால், நாளை உலகம் அழிந்துவிடும் என்ற பீதி பரவியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை முழுக்க முழுக்க வதந்திதான் என்று ஜோதிடர்களும், விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதி மக்களை ஆட்டிப்படைத்து வரும் வார்த்தை மாயன் நாட்காட்டி.....தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மாயன்கள் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்கள் பல்வேறு துறைகளில் அவர்கள் வல்லவர்கள் என்பதை உணர்த்தி வருகிறது.
மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி 21ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியானது. இதைவைத்து 2012 என்கிற ஹாலிவுட் திரைப்படம் வெளியானதால் அச்சமும், பீதியும் உலகத்தில் அதிகமானது. அவர்கள் சொன்ன தேதிக்கு இன்னமும் சில மணி நேரங்களே உள்ளது. பேஸ்புக்கில் கவுண்டவுன் கூட போட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் மாயன் காலண்டர்படி நாளைக்கு உலகம் அழியாது என்று அடித்துக் கூறுகின்றனர் ஜோதிடவியல் வல்லுநர்கள். இதே கருத்தைத்தான் நாசா விஞ்ஞானிகளும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.
மாயன் காலண்டர் மர்மம்
மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது. வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச்சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது.
கடைசி தேதி 2012 டிசம்பர் 21
இதன்படி பார்த்தால், இந்த காலண்டர் கி.மு. 3114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. காலண்டர் அமலுக்கு வந்த பின்னர், 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை வைத்துதான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாளில் உலகம் அழியப்போவதாக, ஆளாளுக்கு ஒரு கதையை கூறி மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகின்றனர். சில மோசடிக் கும்பல்கள் இதை வைத்து மக்களை பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளன.
உலகம் கண்டிப்பாக அழியாது
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்தது. இதேபோல், மாயன் காலண்டர் நிபுணர்கள் மற்றும் அமெரிக்க நிபுணர்களும் ஆராய்ந்தனர். அவர்களின் ஆய்வு முடிவில் உலகம் அழிய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயன் காலண்டர் என்பது 1,44,000 நாட்களை கொண்டது. அதன்பின்னர், அந்த காலண்டர் மறுபடியும் சுழற்சிக்கு உள்ளாகும். இணையதளங்களில் உலா வரும் செய்திகளை போல உலகம் அழிய 100 சதவீதம் வாய்ப்பில்லை. மாறாக மனித இனம், மாயன் இனத்தினரின் கூற்றுப்படி, புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறது. அதாவது புதிய நாட்காட்டி சுற்றில் மனித இனம் அடியெடுத்து வைக்கப்போகிறது.
மக்கள் அச்சப்படவேண்டாம்
மெக்சிகோவின் யூகாடன் நகரில் சமீபத்தில் நடந்த, மாயன் காலண்டர் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அகழ்வாராய்ச்சி துறை நிபுணர் தாமஸ் காலரெட்டா, விண்வெளி ஆய்வாளர் ஆர்காடியோ பொவேடா ரிகால்டே, பேராசிரியர் மார்டே டிரெஜோ உள்ளிட்டோர் இதற்கு பதில் அளித்துள்ளனர். இது கொண்டாடப்பட வேண்டிய விஷயமே அன்றி, பயப்பட வேண்டிய நாள் அல்ல. இந்த கருத்தரங்கின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பூமியின் இறுதி நாளை மாயன் காலண்டர் குறிப்பிடவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை
உலகம் அழிவதற்கான காரணிகளாக எரிமலை சீற்றம், தீவிரவாதிகள் தாக்குதல், விண்வெளிப்பாறை தாக்குதல், சூரிய காந்தப்புயல், கோள்கள் மோதல் ஆகியவை கூறப்படுகிறது. சூரிய காந்தப்புயலால் பூமிக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சூரிய காந்தப்புயல் என்பது ஒவ்வொரு 11 ஆண்டுக்கு ஒருமுறை அது அதிகபட்சமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால், மனித இனத்துக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும், 2012ல் சூரிய காந்தப்புயலுக்கு வாய்ப்பு இல்லை.
கோள்கள் மோதுமா?
பூமியை நோக்கி மோத வருவது அல்லது அதற்கான வாய்ப்புகள் இருக்கும் விண்வெளிப் பாறைகள் குறித்து பல ஆண்டுகளாக நாசா ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. எந்த விண்வெளிப்பாறையும் இரண்டு நாளில் பூமிக்கு அருகில் வர வாய்ப்பே இல்லை. அதேபோல் சூரிய குடும்பத்தில் வளர்ச்சிக் குன்றிய சில கோள்கள் வெகு தொலைவில் உள்ளன. பூமியை நோக்கி வருவதுபோன்று கூட அதன் பாதை இல்லை. இதனால் கோள்கள் மோதலுக்கு இப்போதைக்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை.
துருவ மாற்றம் ஏற்படுமோ?
இது தவிர துருவ மாற்றம் ஏற்படலாம் என்றும் சிலர் பீதி கிளப்புகின்றனர். துருவ மாற்றம் என்பது சராசரியாக 4 லட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்க வாய்ப்புள்ளது. இதனாலும், மனித இனத்துக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு துருவ மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.
எரிமலைக் குமுறல்?
எரிமலை வெடித்துச் சிதறினால் ஒரு குறிப்பிட்ட பகுதிதான் பாதிக்கும். அதேபோல் தீவிரவாதிகள் தாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வேண்டுமானால் நடக்கலாம். இது ஒட்டுமொத்த உலகத்தை அழிக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வதந்தி கிளப்புறாங்களேப்பா?
இப்படி இல்லை, இல்லை என்று விஞ்ஞானிகள் அடித்து கூறினாலும், அமில மழை, பாம்பு படையெடுப்பு, இறால் மழை இவை எல்லாம் உலக அழிவிற்கான அறிகுறி என்று பலரும் நொடிக்கு நொடி பீதியை கிளப்புகின்றனர். உலகம் எவ்வாறு அழியும் என்பதை சித்தரிப்பது போன்று, சில வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவிவருவதும் மகக்ளிடையே அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனையும் ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
வதந்திகளை நம்பாதீங்க
உலகம் அழிந்துவிடும் என்று நாசா நிறுவனம் கூறியுள்ளதாக பரவிவரும் குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் மறுத்துள்ள நாசா, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.