சுக்மா கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை கடத்தி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த நக்சலைட்டுகள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்தவர் நெல்லையைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன். அவருக்கு நக்சலைட்டுகளால் பிரச்சனை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் எங்கு சென்றாலும் உரிய பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவர் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள பாதுகாவலர்களுடன் சென்றார். அப்போது நக்சலைட்டுகள் அவரது பாதுகாவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு அலெக்ஸை கடத்தி காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடந்தது.
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கடத்தல்
அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டது பற்றி தான் ஊடகங்கள் மற்றும் மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கலெக்டருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களை சொல்லவா வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.
எனது கணவரை காப்பாற்றுங்களேன், ப்ளீஸ்
அலெக்ஸின் மனைவி ஆஷா தனது கணவரை காப்பாற்றுமாறு சத்தீஸ்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். தனது கணவருக்கு ஆஸ்துமா உள்ளதால் அவர் காட்டுப் பகுதியில் என்ன கஷ்டமெல்லாம் படுகிறாரோ என்று கூறி கண்ணீர் வடித்தார்.
ஜெயலலிதாவை தொடர்பு கொண்ட குடும்பத்தார்
அலெக்ஸின் உறவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் வீட்டுப் பிள்ளையை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கலெக்டரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தினார்.
குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், வைகோ
சென்னையில் உள்ள கலெக்டரின் பெற்றோரை சந்தித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு
அரசு நக்சலைட்டுகளுடன் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு 13 நாட்கள் கழித்து மே மாதம் 3ம் தேதி அலெக்ஸ் விடுவிக்கப்ட்டார். இதையடுத்து அவர் சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜெ., கருணாநிதியை சந்தித்த அலெக்ஸ்
கடத்தல் சம்பவத்திற்கு பிறகு சென்னை வந்த அலெக்ஸ் முதல்வர் ஜெயலலிதாவையும், திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நன்றி கூறினார்.
வீட்டு வசதித் துறை செயலாளராக நியமனம்
தனது மகன் சுக்மாவில் பணியாற்றவே தான் விரும்புவதாக அலெக்ஸின் தந்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சத்தீஸ்கர் வீட்டுவசதி துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.