வேலு நாச்சியார் எதிரிகளை விரட்டி அடித்தவர், ஜெயலலிதா எதிரிகளை வீழ்த்தியவர்: ஓ. பன்னீர் செல்வம்
சென்னை: வீரமங்கை வேலு நாச்சியார் பல போர்க்களம் கண்டு எதிரிகளை விரட்டி அடித்தவர். அதே போல் முதல்வர் ஜெயலலிதா பல தேர்தல் களம் கண்டு எதிரிகளை வீழ்த்தியவர் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்குப் போராடிய முதல் வீராங்கனை சிவகங்கை வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் 216வது நினைவுநாள் பொதுக் கூட்டம் சென்னை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து விளக்க உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,
வீரமங்கை வேலு நாச்சியார் சிறுவயதில் இருந்தே பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டவர். மேலும் பல்வேறு மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். அதே போல் நமது முதல்வர் ஜெயலலிதாவும் பல்வேறு மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். வீரமங்கை வேலு நாச்சியார் பல போர்க்களம் கண்டு எதிரிகளை விரட்டி அடித்தவர். அதே போல் முதல்வர் ஜெயலலிதாவும் தேர்தல் களம் பல கண்டு எதிரிகளை வீழ்த்தியவர்.
அன்று அந்நிய நாட்டினரை எதிர்த்து போராடியவர் வேலு நாச்சியார். ஆனால் இன்று ஜெயலலிதா அந்நிய முதலீடுகளை அனுமதிக்க முடியாது என்று போராடிக் கொண்டிருக்கிறார். வால்மார்ட் நிறுவனத்தை இங்கே அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார் என்றார்.
இதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோகுல இந்திரா கூறுகையில், வீரமங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் கேட்டவுடனேயே நிறைவேற்றியவர் தான் முதல்வர் ஜெயலலிதா. கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அதற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டதுடன் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி வேலை துவங்கப்பட்டுவிட்டது. வரலாற்றுக்கு வரலாறு படைக்கக் கூடியவர்தான் முதல்வர் ஜெயலலிதா என்றார்.