உயர்படிப்பு அனுமதிக்கு லஞ்சம்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகிகள் 3 பேரை வளைத்தது சிபிஐ
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பல்மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற போது கல்லூரி நிர்வாகிகள் 3 பேரை சிபிஐ கைது செய்தது. லஞ்சம் பெற முயன்ற அனுமதி தரும் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிக்கினர்.
மேல்மருவத்தூரில் தனிராஜாங்கம் நடத்தி வருபவர் 'ஆதிபராசக்தி" சாமியாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் பங்காருஅடிகள். பங்காரு அடிகளிடம் கொட்டிக் குவிந்த பணத்தைக் கொடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒன்று பல் மருத்துவக் கல்லூரி.
இந்த பல்மருத்துவக் கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி நிர்வாகத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் மருத்துவ கவுன்சில் நிர்வாகம் அனுமதி தரவில்லை.
இதைத் தொடர்ந்து குறுக்குவழியில் அனுமதி பெற முடிவு செய்தது. இதற்காக ரூ2 கோடி பேரம் பேசப்பட்டது. இதன் முதல் கட்டமாக ரூ25 லட்சம் சென்னை ராயப்பேட்டையில் வைத்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவல் சிபிஐக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பணம் கைமாறிய போது சிபிஐ சுற்றி வளைத்து மொத்தம் 4 பேரை கைது செய்தனர். இதில் கருணாநிதி, ராமபுத்திரன் ஆகியோர் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள். இந்த நிர்வாகிகளுடன் பணம் கொடுக்க வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ பழனி. மற்றொருவர் லஞ்சம் பெற்ற டாக்டர் முருகேசன். இவர் பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.
இவர்களுடன் பல்மருத்துவக் கல்லூரி நிர்வாகி ஸ்ரீலேகாவையும் சிபிஐ தேடி வருகிறது.