இங்கிலாந்து அணி கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் 4 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
தற்போது 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்து தொடரை சொந்த மண்ணில் வென்று திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
காம்பீரும், ரகானேவும் தொடக்க வீரர்களாக ஆடுகிறார்கள் கோஹ்லி, யுவராஜ்சிங், ரெய்னா, கேப்டன் டோணி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் எப்படி விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இஷாந்த் சர்மா புவனேஸ்வர் குமார், சமி அகமது ஆகியோர் தொடர்ந்து இடம் பெறலாம்.
இங்கிலாந்து அணியில் கேப்டன் குக், இயன் பெல், பீட்டர்சன், மார்கன், கீவ்ஸ்வெட்டர், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் பின், பிரெஸ்னென் போன்றோர் அந்த அணிக்கு பலம்
இங்கிலாந்துடனான 5 போட்டிகளிலும் இந்திய அணி வென்றால்தான் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.