மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி, இளம்பெண் பலி: மக்கள் பீதி
விருதுநகர்: விருதுநகர், நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன் மகள் சங்கரேஸ்வரி(11). அஜிஸ் நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விஷ காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ரகுபாண்டியன் மகன் ராஜேஷ்(12). அவர் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை இறந்தார். இந்த பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.