டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் பள்ளி சிறார்கள்…
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பாவூர் சத்திரத்தில் மேலபாவூர் ரோட்டில் வசித்துவருபவர் நாராயணன் இவரதுமகன் ஹரிபிரசாத் டெங்கு காய்ச்சல் காரணமாக நெல்லை மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டிருந்தான் நேற்று நள்ளிரவு அவன் மரணமடைந்தான்.
விருதுநகர் சிறுமி பலி
விருதுநகர் மாவட்டத்தில் ரோசல்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட 7 வது வார்டு வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன் மகள் நந்தினி . இவர் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல்லில் தொடர் பலி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், ஒன்பதாவது வார்டை சேர்ந்தவர் மோட்டார் மெக்கானிக் கண்ணன். அவரது மகன் மாதேஸ்வரன், வயது-10, அங்குள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாதேஸ்வரன், வேலூரில் உள்ள அரசு மருத்துமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், சிறுவன் மாதேஸ்வரனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, மேல்சிகிச்சைக்காக, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறுவன் மாதேஸ்வரனுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அதே பகுதியில், சில வாரத்துக்கு முன் இரண்டு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரே பகுதியில், சிறுவர்கள், தொடர்ந்து டெங்கு காய்சலால் பாதிக்கப்படுவது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.