மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 96 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் சினிமாவில் நடித்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து 25 ஆண்டுகாலம் ஆகிறது. ஆனாலும் இன்றைக்கும் உலகம் முழுவதும் தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரைப் பற்றி தெரியாத பல செய்திகள் உள்ளன. அவருடைய பிறந்தநாளில் அவரைப்பற்றி சில தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் சத்யபாமா. கோபாலமேனன் - சத்யபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917ம் ஆண்டு கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் ஜனவரி 17ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.
எம்.ஜி.ஆருக்கு மூன்று வயதாக இருந்தபோது 1920ம் ஆண்டு, அவருடைய தந்தை கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு சத்யா அம்மையார் தலையில் விழுந்தது. அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார், சத்யபாமா.
கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அரும்பாடு பட்டார், சத்யபாமா. இதன்பின்னர் குடும்ப கஷ்டத்தைப் போக்க நாடகக்கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர்.
19 வயதில் சினிமா
1935_ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.






































