Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நடிகராக தொடங்கி தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர்!

Posted by:
Published: Thursday, January 17, 2013, 11:31 [IST]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 96 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் சினிமாவில் நடித்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து 25 ஆண்டுகாலம் ஆகிறது. ஆனாலும் இன்றைக்கும் உலகம் முழுவதும் தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரைப் பற்றி தெரியாத பல செய்திகள் உள்ளன. அவருடைய பிறந்தநாளில் அவரைப்பற்றி சில தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் சத்யபாமா. கோபாலமேனன் - சத்யபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917ம் ஆண்டு கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் ஜனவரி 17ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

எம்.ஜி.ஆருக்கு மூன்று வயதாக இருந்தபோது 1920ம் ஆண்டு, அவருடைய தந்தை கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு சத்யா அம்மையார் தலையில் விழுந்தது. அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார், சத்யபாமா.

கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அரும்பாடு பட்டார், சத்யபாமா. இதன்பின்னர் குடும்ப கஷ்டத்தைப் போக்க நாடகக்கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர்.

19 வயதில் சினிமா

1935_ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

புகைப் பிடிப்பதை தவிர்த்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). தன்னுடைய படங்களில் சிகரெட் பிடிப்பது மாதிரி காட்சிகள் வைப்பதைத் தவிர்த்தார்.

‘நினைத்ததை முடிப்பவன் 'படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

 

கண்ணதாசன் பாடல்கள்

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.

ஜனாதிபதி பரிசு பெற்ற படம்

எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

புராணப் படத்தை தவிர்த்த எம்.ஜி.ஆர்

‘கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்களாம். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

மூன்று படங்களை இயக்கினார்

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய மூன்று படங்களை எம்.ஜி.ஆர் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

 

ஆண்டவனே என்றழைக்கும்எம்.ஜி.ஆர்

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !' என்றுதான் அழைப்பார் !.அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார் !

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

அடையாளமான தொப்பி

அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

ஏ.கே.47 பரிசளித்த பிரபாகரன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

கல்விக்கு உதவியவர்

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வரும் கோவை சரளா !

நிறைவேறாத ஆசை

பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது இந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.

English summary
No hero ever had the golden run of MGR in Tamil cinema. He is the only one who has not seen a downward trend in Tamil film industry. He had a role wittingly or unwittingly in every change Tamil cinema faced in the last fifty years. In fact it may not be too much to say Sivaji Ganesan started losing his revered place after 1977 only because he did not have the company of MGR.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL