
பெங்களூர்: நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோவின் காலாண்டு லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ. 1,716 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டின் அதன் லாபம் ரூ. 1,456 கோடியாக இருந்தது.
டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் விப்ரோவின் வருவாய் ரூ. 10,989 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ. 9,965 கோடியாக இருந்தது.
விப்ரோவின் ஐடி சர்வீசஸ் பிரிவில் இப்போது 1,42,905 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 2,336 பேரை கூடுதலாக பணியில் சேர்த்துள்ளது விப்ரோ. இதே காலகட்டத்தில் புதிதாக 50 வாடிக்கையாளர்களையும் பிடித்துள்ளது.
விப்ரோவின் கன்சூமர் கேர் மற்றும் மின் விளக்குப் பிரிவு கடந்த ஓராண்டில் 17 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் வருவாய் ரூ. 1,028 கோடியாக உள்ளது.










