
கொடநாடு: டீசல் விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, இந்த முடிவை ஆதரித்தாரா அல்லது எதிர்த்தாரா என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி குறித்து அவ்வப்போது நீட்டி முழக்குகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது புதல்வர் மு.க. அழகிரி உறுப்பினராக இருக்கும் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தான் இந்த மக்கள் விரோத முடிவை எடுத்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு அழகிரி ஆதரவு தெரிவித்தாரா? எதிர்ப்பு தெரிவித்தாரா? மொழி புரியவில்லை என்று மவுனமாக இருந்தாரா? அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா? என்பதை மக்கள் விரோத மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் மு. கருணாநிதி தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
எது எப்படியோ, ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவினை திரும்பப் பெற வேண்டும் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை எவ்வித உச்சவரம்பும் இன்றி மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்றும், தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது கேள்வி எழுப்பியுள்ளார்.










