கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் திறந்திருந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் மாலதி. அங்குள்ள சி.எம்.எஸ். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். காலை 11 மணியளவில் வகுப்பறையில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற மாணவி அங்கு திறந்திருந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் மாணவி மாலதி வகுப்பு வராத காரணத்தினால் வகுப்பு ஆசிரியரும் மாணவிகளும் மாலதியை தேடியுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் மாணவி விழுந்து இருந்ததை கண்டு பிடித்தனர். உடனடியாக மதியம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிடவே மாலதியைத் தேடி அவளது பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் மாலதி விழுந்து விட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாலதியின் பெற்றோர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து மாணவியின் உடலை மீட்டனர்.
மாணவியின் மரணம் பற்றி பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியத்தினால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் பள்ளி மாணவி ஸ்ருதி பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து இரு தினங்களில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே எல்.கே.ஜி மாணவி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் தனியார் பள்ளியில் நீச்சல் குளத்தில் சிக்கி ரஞ்சன் என்ற மாணவன் உயிரிழந்தான். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

















