
சென்னை: வழக்கமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளுக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர்களைவிட முன்பாக, உடனடியாக வரவேற்பு தெரிவித்து விடுவார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இந் நிலையில் ஒரு ரூபாய் இட்லி அறிவிப்புக்கு கொஞ்சம் லேட்டாக தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் சர்க்கரை, அட்டை வைத்திருப்போருக்கு நூறு ரூபாய் என வழங்கியதோடு, பல்துறை பணியாளர்கட்கும் ஊக்கத் தொகையும் வழங்கி, கடும் மின் தட்டுப்பாடு, பருவம் பொய்த்ததாலும், கர்நாடக அரசின் ஆணவப் போக்கால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை, ஆகியவற்றிற்கு இடையில் தமிழக அரசின் இந்த நல உதவி அமைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி இதனை வரவேற்றது.
ஏறிவரும் உணவு வகைகளின் விலை உயர்வால் அவதிப்படுவதை உணர்ந்து, தமிழக அரசு முதல் கட்டமாக சென்னை மாநகரில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர்ச்சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவித்து, அதற்காகத் தேவைப்படும் அரிசியையும் ஒதுக்கீடு செய்து, சென்னை மாநகராட்சியை நிறைவேற்ற ஏற்பாடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம்.
ரயில்வே துறையின் அனுமதி பெற்று இட்லி இரண்டு 12 ரூபாய், பூரி 12 ரூபாய், பொங்கல் 16 ரூபாய், மதியம் சைவ உணவு 95 ரூபாய் அசைவம் 125 என விலையை உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசின் ஒரு ரூபாய் இட்லி என்பதை மிகவும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.


















