60 லட்சத்திற்கு ஏலம் போன 25 பைசா ஸ்டாம்ப்!
1854ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கல்கத்தாவில் உள்ள சர்வே அலுவலகத்தில் ஒரு நாலணா (25 பைசா) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அதில், ராணி விக்டோரியாவின் படம் தவறுதலாக தலைகீழாக அச்சாகி விட்டது. இதை கவனிக்காத அதிகாரிகள் அப்படியே விற்பனைக்கு அனுப்பி விட்டனர். இதை சில பகுதிகளில் விற்பனையும் செய்து விட்டனர்.பின்னர் விஷயம் தெரிந்து விற்பனையாகாத ஸ்டாம்ப்களை அழித்து விட்டனர்.
இந்த நிலையில் அந்த அஞ்சல் தலைகளில் சுமார் 30 மட்டுமே இப்போது இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றினை அமெரிக்காவை சேர்ந்த, அஞ்சல்தலை சேகரிப்பாளர் ராபர்ட் குன்லிப் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார். பின்னர், அதை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
அந்த அஞ்சல்தலை நேற்று லண்டனில் ஏலம் விடப்பட்டது. லண்டனை சேர்ந்த ஸ்பிங்க் என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விட்டது. இது ரூ.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது என்று அந்த ஏல நிறுவனம் கூறியுள்ளது.