கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் 8-ந் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும் நிலை இருக்கிறது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தமக்கு ஆதரவாக இந்தியாவை திசை திருப்ப இந்திய தலைவர்களை சந்திக்க மகிந்த ராஜபக்ச வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
புத்தகயாவில் உள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தவே ராஜபக்சே வருகிறார் என்று கூறப்பட்டாலும் அவர் ஜெனிவா கூட்டத்தை முன்வைத்தே இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
கடந்த முறை சாஞ்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய பிரதேச மாநிலத்துக்கே சென்று போராட்டம் நடத்தியிருந்தார். மேலும் மீண்டும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் வைகோ அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே, இந்தியா வருகை தர இருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.










