ஐ.டி. அதிகாரிகளை நான் மிரட்டலையே! பல்டியடித்த நிதின் கட்கரி
பாஜக ஆட்சிக்கு வந்தால் நீங்கள் யாரும் தப்ப முடியாது என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பொதுக் கூட்டத்தில் மிரட்டல் விடுத்தார் கட்காரி. இதற்கு ஐஆர்எஸ் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கத்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வருமான வரித்துறையும் கத்காரிக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து கத்காரி தற்போது பல்டி அடித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக இரண்டாவது முறையாக நிதின் கட்காரி தேர்ந்து எடுக்கப்பட இருந்தார், அப்போது அவருக்கு தொடர்புடைய சில நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, போட்டியில் இருந்து அவர் விலகிக்கொண்டார். இதையடுத்து ராஜ்நாத் சிங் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கோபமாக இருந்த கட்காரி, மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர்களை குற்றம் சாட்டினார்.
‘‘காங்கிரஸ் கட்சி மூழ்கிக்கொண்டிருக்கும் படகு. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது, வருமானவரி அதிகாரிகளை காப்பாற்ற சிதம்பரமோ, சோனியாவோ இருக்க மாட்டார்கள்'' கூறி இருந்தார். கட்காரியின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டினார்கள். கட்கரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட நிதின் கட்காரி, வருமானவரி அதிகாரிகளை ஒருபோதும் தான் மிரட்டவில்லை என்று கூறி இருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கருத்துகளை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டதாகவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
போட்ட கையெழுத்தை தன்னுடைய இல்லை என்று கூறுவதும், சொன்ன கருத்தை சொல்லவே இல்லை என்று மறுப்பதும் அரசியல்ல சாதாரணமப்பா என்பது மக்களுக்கு தெரியாதா என்ன?