காஷ்மீர் பெண்கள் பேண்ட் குழுவுக்கு தடை... பாஜக கண்டனம்
டெல்லி: காஷ்மீரின் முதல் அனைத்து மகளிர் பேண்ட் குழுவுக்கு மத அமைப்பு பாத்வா விதித்திருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல என்று அது வர்ணித்துள்ளது.
காஷ்மீரில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே இடம் பெற்ற ராக் பாண்ட் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த குழுவை விமர்சித்து கருத்துக்கள் பரவி வருகின்றன. இதையடுத்து இந்த குழு தனது நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் தற்போது மத குருமார்கள் இந்த குழு கலாச்சாரத்திற்கும், மதத்திற்கும் எதிரானது என்று கூறி இது செயல்பட பாத்வா விதிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் பெரிய முப்தி இந்தக் குழுவுக்குக் கண்டனம் தெரிவித்து பாத்வா பிறப்பித்துள்ளார். மேலும், இசை என்பது சமூகம் மற்றும் பெண்களிடையே தடை செய்யப்பட்ட ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
இந்த செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், இது அநீதியானது. மதத்தின் பெயரால் இப்படியெல்லாம் தடை விதிக்க முடியாது, கூடாது. உங்களுக்குப் பாட்டு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் கேட்காதீர்கள்.ஆனால் மதத்தைக் காரணமாக வைத்து பாடல் பாடுவதை தடுத்தால் அது தவறாகும் என்றார் நஜ்மா.
இந்த இசைக் குழுவில் 3 இளம் சிறுமிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துவதில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் உள்ளனராம். 16 வயதான நசீர் இதில் பாடகியாக இருக்கிறார். காலித் கிதார் வாசிக்கிறார். தீபா டிரம்மராக இருக்கிறார். காலித்துக்கும், தீபாவுக்கும் வயது 15 ஆகிறது. தற்போது இந்தக் குழுவினர் நேரடி நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டனர். மாறாக இசை ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.