
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகம் அறிமுகமில்லாத, பிரபலமாகாத ஐந்து வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் அனைவருமே பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது சென்னை அணி உ.பியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இம்தியாஸ் அகமது, அங்கித் ராஜ்புத், ஹரியானா வேகப் பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, கர்நாடக வேகப் பந்துவீச்சாளர் ரோனித் மோர், தமிழக இடது கை சுழற்பந்துவீச்சாளர் கார்த்திகேயன் ஆகியோரை வாங்கியுள்ளது.
இவ்வளவு பேரை வாங்கியுள்ளதன் மூலம் சென்னை அணியின் பந்து வீச்சு பெரும் பலமடைந்துள்ளது. வெரைட்டியும் கிடைத்துள்ளது. அட்ரஸ் இல்லாத வீரர்களாக இவர்கள் இருந்தாலும் கூட திறமையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
நடந்து முடிந்த ரஞ்சிப் போட்டிகளில் இம்தியாஸ்தான் உ.பி அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதாவது 37 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். 2011 ஐபிஎல் தொடரின்போது இவர் புனே வாரியர்ஸ் அணியில் இருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட இவருக்கு ஆட வாய்ப்பு தரப்படவில்லை.
இவர்களை வைத்து எதிர் அணிகளை பந்து வீச்சால் எப்படி நிலை குலைய வைக்கப் போகிறது சென்னை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















