திமுகவுடன் விஜயகாந்த் நெருங்குவது பொறுக்குவதில்லையா?: கருணாநிதி கேள்வி
திமுக எம்.பியான சிவா இல்ல திருமண விழாவுக்காக திருச்சி சென்ற கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவைப் போல் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறாது. இங்குதானே நானே எல்லாம் என்ற ஆட்சி நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வருமா என்று எனக்குத் தெரியாது. முலாயம்சிங்கின் கருத்து வெறும் யூகம்தான் எனக்கு யூகமும் வியூகமும் இல்லை.
ராஜபக்சேயின் வருகை குறித்து மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுகவுடன் நெருங்கி வருகிறாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் திமுகவுடன் நெருங்குவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? என்றார். மேலும் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியில் தம்மை விஜயகாந்த் சந்திக்க இருப்பதாக கூறப்படுவது தவறானது என்றார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி பிரதமரை சந்தித்துதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவும் இல்லையே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் "ஆல் பார்ட்டியாவது...? ஆள் இல்லாத பார்ட்டியாவது....?'' எல்லாம் நானே என்கிற ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றார் கருணாநிதி.