திருச்சி திருமணத்தில் குஷ்புவைத் தாக்கிய திமுகவினர்.. விமான நிலையத்தில் செருப்பு வீச்சு!
இதனை குஷ்புவே செய்தியாளர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை குஷ்பு.
இந்த பேட்டி இன்று வெளியானதுமே திமுகவினர், குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.
இன்று திருச்சியில் திமுக எம்பி சிவாவின் இல்லத் திருமணம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க சென்றிருந்த குஷ்புவைப் பார்த்த திமுகவினர், ஆத்திரத்துடன் தாக்க ஆரம்பித்தனர்.
இளைஞர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குஷ்பு காரில் ஏறும்போது தாக்கியுள்ளனர். அவர்களிடம் குஷ்பு தன் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்றும், தன் பேட்டியை அந்த இதழ் தவறாக வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் அதை தொண்டர்கள் ஏற்கும் நிலையில் இல்லை.
எனவே அங்கிருந்து காரி்ல் தப்பித்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் குஷ்பு. விமான நிலையத்திலிருந்து அவர் வரும்போது ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து குஷ்புவுக்கு எதிராக கோஷமெழுப்பினர். அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர்.
முன்னதாக குஷ்பு வீட்டையும் திமுகவினர் சிலர் தாக்கினர். கார் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். இந்த தாக்குதல்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "திருச்சியில் திருமண மண்டபத்திலேயே என்னை சிலர் தாக்கினர். விமான நிலையத்திலும் செருப்பு போன்றவற்றை வீசி தாக்கினர். இது தவறான செயல். நான் சொல்லாத ஒன்றுக்காக தாக்கப்பட்டுள்ளேன்," என்றார்.
மேலும் தமது வீடு தாக்கப்பட்டது குறித்து எனது தலைவர் கருணாநிதி விசாரணை நடத்தி வருகிறார். நான் கட்சிக்கு வரும்போது என் வழி தலைவர் வழி என்றுதான் சொன்னேன். அதைத்தான் இப்பவும் சொல்றேன். அதைத்தான் பேட்டியிலும் சொன்னேன். என் வீட்டுல தலைவர் படமும் தளபதி படமும்தான் மாட்டி வைத்திருக்கிறேன் என்றார் அவர்.