ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு- சென்னையில் கருப்பு உடையுடன் 'டெசோ' கருணாநிதி போராட்டம்!
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கருப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் சார்பில் கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடையில் குவிந்தனர். டெசோ அமைப்பை சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கருப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
நாம் கண்போல் காத்த அருமைத் தமிழ் மொழியும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரிலான கிராமங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக ராஜபக்சேவின் கொடுங்கோலால் அழிக்கப்பட்டு மாற்றுப் பெயர் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்களில் எப்படி ஸ்ரீ என்ற வடமொழி எழுத்தைப் புகுத்தினார்களோ அவ்வாறு சிங்கள மொழியில் ஊர்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடியாது என்று கூறுகிற ராஜபக்சே அரசைப் பற்றி மத்திய அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.