
பணகுடி: வறட்சியின் காரணமாக பணகுடியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகிவிட்டன. இதனால் காய்ந்த நெற்பயிர்களை அறுத்து கால்நடை தீவணத்திற்கு விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.
பணகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஹேக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது அதில் 50 சதவீத ஹேக்டர் அளவுக்கு விவசாய பணிகள் நடைபெற்றன. மியாமிபுதுகுளம், தளவாய்புரம், சூரியன் குளம், சாத்தான்குளம், வீரபாண்டியன்குளம், தண்டையர்குளம் மற்றும் 10க்கும் மேற்பட்ட கு்ளங்களில் உள்ள தண்ணீர் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த வருடம் பருவமழை இரண்டும் சரியாக பெய்யாததால் இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். எனவே கிணற்று தண்ணீரை நம்பி திருந்திய நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது கிணற்று நீரும் போதுமானதாக இல்லாததால் நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் கருகி விட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கருகிய பயிற்களை காப்பாற்ற வழி தெரியாத விவசாயிகள் அவற்றை அறுத்து கால்நடைகளுக்கு தீவணமாக கொடுத்து வருகின்றனர். விவசாயத்தின் நிலைமை இந்தஅளவுக்கு மோசமாகி வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.





















