ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்கு எதிராக இருப்பதாகக் கூறி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் உருவத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் உலவ விட்டவிவகாரம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
கடந்த மாதம் தனித் தெலுங்கானாவுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் கிரண்குமார் ரெட்டியை ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டிருக்கின்றனர். இதில் ஆபாச உடை அணிந்த பெண்களின் முகத்தை மறைத்து அதில் கிரண்குமார் ரெட்டி முகத்தை இணைத்து உலவ விட்ட படங்களே அதிகமாக இருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.


















