
டெல்லி: கேரள மாநிலத்தை உலுக்கி வரும் சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜெ.குரியன் விளக்கம் அளித்திருக்கிறார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு சூரியநெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதில் தர்மராஜன் என்பவருக்கு மட்டும் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தர்மாராஜனோ ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருந்தபடியே, சிறுமியை பலாத்காரம் செய்தது குரியனும்தான் என்று தர்மராஜன் அண்மையில் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தர்மராஜன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியும் குரியன் தம்மை பலாத்காரம் செய்தார் என்று கூற சூரியநெல்லி வழக்கு விஸ்வரூபமெடுத்தது.
இதைத் தொடர்ந்து குரியன் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்களை கேரளா எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று நேரில் சந்தித்த குரியன் தமக்கு தொடர்பு இல்லை என்று கூறி விளக்கம் அளித்தார்.
சோனியாவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து குரியன் ராஜினாமா செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
தர்மராஜன் சரண்?
இதனிடையே தர்மராஜனை கேரள மாநில போலீசார் வலைவீசி தேடத் தொடங்கினர். அவரது செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து அதன் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு கேரள போலீசார் விரைந்தனர். ஆனால் தர்மராஜனோ கோட்டயம் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தர்மராஜன் சரணடைவதற்கு முன்பாகவே தூக்கிவிட வேண்டும் என்பதில் கேரள போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.










